இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம்
இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு பணி நடக்க உள்ளது. அக்னிவீர் எனப்படும் பணிக்கு சென்னை, கோவை, திருச்சியில் முகாம் அமைக்கப்பட்டு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தொடக்க சம்பளமாக மாதம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். இது 4 ஆண்டு ஒப்பந்த பணி ஆகும். பணி முடிந்து திரும்பும்போது விண்ணப்பதாரர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்
டெக்னிஷியன், ஜெனரல் டூட்டி, கிளர்க்/ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் - 10-ஆம் வகுப்பு, அக்னி வீர் டிரேட்ஸ்மேன் -8 ஆம் வகுப்பு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி :
அக்னி வீரர் பொதுப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். டிரைவர், உள்ளிட்ட பணியிடங்களுக்கு எல்.எம்.வி டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருக்க வேண்டும்.
டெக்னிக்கல் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளை கொண்ட அறிவியல் பிரிவு எடுத்து படித்து இருக்க வேண்டும். 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கிளர்க் / ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பணிக்கு 10, +2 / அதாவது, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தேர்வர்கள் தெளிவாக அறிந்து கொண்ட பின் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வயது வரம்பு :
17½ வயது முதல் 21 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 01 அக்டோபர் 2004 முதல் 01 ஏப்ரல் 2008 க்குள்ளாக பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
சம்பளம் :
மத்திய அரசு அக்னிவீரர் திட்டத்திற்கு வரையறுத்துள்ள விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும். 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலானது இந்த அக்னிவீரர் திட்டம்.
- முதல் ஆண்டில் 30 ஆயிரம்,
- இரண்டாம் ஆண்டில் 33 ஆயிரம்,
- மூன்றாம் ஆண்டில் 36,500,
- நான்காம் ஆண்டில் 40 ஆயிரம் வழங்கப்படும்.
ஒப்பந்த காலம் முடிந்து வெளியேறும் போது 10.04 லட்சம் சேவா நிதியாக வழங்கப்படும்.
தேர்வு முறை :
ஆன்லைனில் பொது நுழைவுத்தேர்வு (CEE), கிளர்க் / ஸ்டோர் கீப்பர் பணிக்கு டைப்பிங் டெஸ்ட் நடைபெறும். இரண்டாம் கட்டமாக ஆவண சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு (முகாம் நடைபெறும் இடத்தில்) மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம் :
ரூ.250 ஆகும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 12.03.2025 ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.04.2025 ஆகும். ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் ஜூன் 2025 ஆகும்.
முகாம் நடைபெறும் இடங்கள்
சென்னை முகாம் :
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு.
கோவை முகாம் :
கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்,நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தர்மபுரி.
திருச்சி முகாம் :
கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை.
விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.