2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த சி.ஏ தேர்வு தேதி மாற்றம்

இந்தியா முழுவதும் சி.ஏ (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என  இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் நேற்று அறிவித்தது. 


2025 ஆம் ஜனவரி 14 அன்று தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் 
சி.ஏ. தேர்வை நடத்துவது இந்த தேர்வை எதிர்கொள்ள இருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

குறிப்பாக, பொங்கல் பண்டிகை அன்று சி.ஏ தேர்வுகளை மத்திய அரசு அறிவித்ததற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்தார். அதோடு தி.மு.க எம்.பி கனிமொழி, அ.ம.மு.க தலைவர் டிடிவி தினகரன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதிலும் மொழி பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பிரச்சாரமாக கொண்டு வருகின்றனர் என்றும் தேர்வு ஆணையத்தின் முடிவுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில், ஜனவரி மாதம் 14-ம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு ஜனவரி 16-ம் தேதிக்கு மாற்றி இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சி.ஏ பவுண்டேசன் தேர்வு 2025 ஜனவரி 12, 16, 18,20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது. 

தை பொங்கல் அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என மக்களவை எம்.பி., சு.வெங்கடேசன் வைத்த கோரிக்கை நிறைவேற்றம் செய்யப்பட்டது.